செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மனசுக்கு பிடிச்ச வேலை

 ஆறு வருடங்களுக்கு பிறகு ஒரு இனிய மாலை பொழுதில் நான் பிறந்து வளர்ந்த ஊர் வந்து இறங்கியாச்சு. திருச்சிதானா இது... பெரிய பெரிய கட்டிடங்கள்..., புதிது புதிதான போக்குவரத்து சிக்னல்கள்..., நிறைய ஒரு
வழிப்பாதைகள்..., புதிதாக ஒரு ஊருக்கு வந்ததை போல் மனதில் ஒரு சஞ்சலம். பஞ்சம் பிழைக்க ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊர்களுக்கு சென்றாலும், சொந்த ஊர் என்பதை நினைத்தாலே மனதில் இனிய நினைவுகள் நிழலாடும். ஆனால் நகர்மயமாக்கலால் பெருகி வழியும் மக்கள் தொகை, மக்கள் தொகை அதிகரிப்பால் இடப்பற்றாக்குறை... விசாலமான வீடுகள் குறைந்து தீப்பெட்டி அடுக்கி வைத்தது போன்ற அடுக்கு மாடி குடியிருப்புகள். சாலை ஓர சிமெண்ட் ஏடுகள் கூட ஏழைகளின் தரைத்தளமாக..., கிட்டதட்ட ஒரு நரகமாக மாறி இருந்தது ஊர்.


சிந்தனையுடன் நடந்து கொண்டிருக்கும் போது, காலில் ஏதோ இடறியது, யாரே புரியாத மொழியில் கத்துவது போல் இருந்தது. சட்டென பின்வாங்கினேன். யாரே நடந்து செல்லும் பாதையில் உறங்கி இருக்கிறார். அருகில் இருந்த மின் விளக்கு ஊனமாகி போயிருந்ததால், கவனிக்காமல் அவரை மிதித்து விட்டேன். குனிந்து அவரை பார்த்தேன், மதுவின் வாடை குப்பென தூக்கியது. ஓ...  இவன் பேசியது ஏன் புரியவில்லை என்பது புரிந்தது. ஆனால் இவரின் குரல் பரிட்சையமாய் இருக்கிறது. பாக்கெட்டில் கைவிட்டு லைட்டரை எடுத்து பற்ற வைத்து மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தேன். பரட்டைத் தலை, ஒரு மாத தாடி, புழுதியில் புரண்டு நாறிப்போன சட்டை பேண்டுடன் இருந்தான். ஆனால் எங்கேயோ பார்த்த முகமாக தெரிந்தது. ஆ... இவன்.... என் நண்பன் மாணிக்கம் அல்லவா? ஏன் இப்படி கிடக்கிறான்? தெருவில் படுக்கும் அளவு அவன் குடும்பம் ஒன்றும் ஏழ்மையில் இல்லையே... எனக்கு எதுவும் புரியவில்லை.

அருகில் இருந்த கடையில் சோடா வாங்கி முகத்தில் தெளித்தேன். திட்டிக் கொண்டே என்னை சிரமப்பட்டு கண்விழித்து பார்த்தான். மச்சான்... எப்படா வந்த...? குரலில் அதே பாசம், ஆனால் அதிகம் பேச முடியத நிலை.

சரி ஏண்டா இங்க கிடக்குற..?

நான் எங்கடா போறது ? வீட்ல எங்கயாவது ஒழிஞ்சு போ.. இனிமே இந்த பக்கமே வராதன்னுடாங்க. இது தான் இப்போதைக்கு வீடு.

அவன் சொல்ல, என் மனம் கனத்தது. சரி வா வீட்டுக்கு போவோம் - அழைத்தேன்.

உங்க வீட்டுக்கா...? வேணாம்டா... உங்கப்பா உன்ன தப்பா நினைப்பாரு.

அதெல்லாம் ஒன்னுமில்ல, கிளம்பு...

எழுந்து நிற்க முயற்சித்தான், முடியவில்லை. இரு... ஏதாவது வண்டி புடிச்சிட்டு வர்றேன்.

என் வீட்டுக்கு இன்னும் பதினைஞ்சு கிலே மீட்டர் போகனும். வழக்கமா தஞ்சாவூர் போற பஸ்ல ஏறி போயிடலாம். ஆனா மாணிக்கத்த வைச்சுக்கிட்டு கண்டக்டர்கிட்ட திட்டு வாங்க முடியாது.

தூரத்தில் ஏதே வண்டி வர்ற வெளிச்சம் தெரிய, கை காட்டினேன். தஞ்சாவூர்ல இருந்து திருச்சி வந்து காலியாக திரும்பி போய் கொண்டு இருந்த கார் ஒன்று அருகில் வந்து நின்றது. குறைந்த விலையில் இது போன்ற காரில் அடிக்கடி பயணம் செய்த அனுபவம் உண்டு. இருந்தாலும் நண்பனின் நிலையை மோப்பம் பிடித்த டிரைவர் எழுபத்தைந்து ரூபாய் கேட்டார். வேறு வழியில்லை... ஏறி அமர்ந்தோம். மாணிக்கம் சாய்ந்து படுத்து விட்டான். வண்டி கிளம்பியது. என் மனம் அசைபோடலாயிற்று.

மாணிக்கம் எனக்கு பதினைந்து வருட பழக்கம். மாணிக்கத்துக்கு புகை மற்றும் குடிப்பழக்கம் உண்டு என்றாலும், அவனின் மனிதாபிமானம், பிறர்க்கு உதவும் குணம் மற்றும் எதையும் சிரித்த படியே ஏற்றுக் கொள்ளும் மனம், ஆகியவை தான் நாங்கள் நண்பர்களாக மாற காரணம். எங்கள் இருவருடைய வீடும் ஒரு கிலே மீட்டர் இடைவெளியில்தான் இருந்தது. முதலில் அவனை பார்த்தது பஸ் ஸ்டாண்டில்தான். நான் முதன் முதலாக வேலைக்கு செல்லும் நாள் அன்று பஸ்க்கு காத்திருந்தேன். அப்போது என் மற்றொரு நண்பனுடன் மாணிக்கம் காலேஜ் செல்ல வந்தான். என் நண்பன் மாணிக்கத்தை அறிமுகப் செய்து வைத்தான். சிரிக்க சிரிக்க பேசினான். ஒரே பஸ்ஸில் ஏறினோம். திருவெரும்பூர் நிறுத்தத்தில் பஸ் சற்று நேரம் நின்றது. நாங்கள் எப்போதும் படிகட்டில் நின்று பயணம் செல்வதால், சற்று கீழே இறங்கி நின்றோம். அப்போது ஒரு வயதான பெண், பசியென்று வயிற்றை காட்டி கை நீட்டினாள்.

சார்...சேஞ்ச் ஏதாவது இருக்கா..?, மாணிக்கம் கேட்டான்.

நான் எப்போதும் மதிய உணவு கையோடு எடுத்து செல்வதால், போக வர பயண செலவுக்கு மட்டுமே பணம் வைத்திருந்தேன்.

சாரி பாஸ்... எங்கிட்ட இல்ல என்றேன்.

மீண்டும் என் நண்பனிடம் கேட்டான். அவனும் இல்லையென்று கூற...

சட்டென தன் பையில் கைவிட்டு பத்து ரூபாய் எடுத்து கொடுத்தான் மாணிக்கம். போய் மொதல்ல சாப்பிடுங்க என்றவன் திரும்பி பார்க்காமல் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

பாஸ்... ஒரு நிமிஷம் நில்லுங்க, எங்க போறீங்க...? என்றேன்.

இல்ல சார். எங்கிட்ட பத்து ரூபாய் தான் இருந்துச்சு. அதை கொடுத்திட்டேன். இப்ப டிக்கெட் வாங்க காசில்ல. நான் நாளைக்கு காலேஜ் போயிக்கிறேன்.

நான் அதிர்ந்து போனேன். என்னிடம் திரும்பி போவதற்கான டிக்கெட் கட்டணம் மட்டுமே இருந்தது. பரவாயில்லை ஆபிஸில் யாரிடமாவது வாங்கிக் கொள்ளலாம்.

வாங்க மாணிக்கம் நான் டிக்கட் எடுக்கிறேன் இதுக்காக காலேஜ்க்கு போகாம இருக்கலாமா..?.

அரை மனதேடு பஸ் ஏறினான்.

என்னங்க மாணிக்கம் ஒன்னுமே பேசாம வர்றீங்க.

இல்ல சார்... ரொம்ப வயசான அம்மா... பாவம் சாப்பிட கூட எதுவும் இல்ல. வேலை செய்யக்கூட முடியாது. ஏன் சார் நம்ம நாட்ல மட்டும் தான் இப்படி இருக்காங்களா... இல்ல அமெரிக்காவுலயும் இப்படி இருப்பாங்களா..?

அவன் கல்லூரி நிறுத்தம் வரும் வரை இதே பேச்சு... இறங்கும் போது சொன்னான். இதுக்கு நாம ஏதாச்சும் செய்யனும் சார்.

என் நண்பனிடம் கேட்டேன். இவன் ஏண்டா இவ்வளவு பீல் பண்றான்...?

நல்ல வேளை அவன் கண்ணீர் விடலன்னு சந்தோஷப்படு. அடிக்கடி இப்படி ரொம்ப எமோஷனல் ஆயிடுவான். ரொம்ப நல்லவன்னான்.

எனக்கும் மாணிக்கத்திற்க்குமான முதல் சந்திப்பே எங்கள் நெருக்கமான நட்புக்கு வித்திட்டது. பின்பு நாங்கள் தினமும் ஒரே பஸ்சில் போக நெருக்கம் அதிகமாகியது. அவன் படித்து முடித்தது ஏதே சேவை மையத்தில் வேலை பார்க்க தொடங்கினான்.

எனக்கு சென்னையில் வேலை கிடைத்து கிளம்பும் போது கேட்டேன், ஏண்டா புரபெஷனல் கோர்ஸ் முடிச்சிட்டு, கவுன்சலிங், விழிப்புணர்வு நிகழ்ச்சின்னு சுத்திகிட்டு இருக்க, படிச்சதுக்கே ஈஸியா வேலை கிடைக்குமே.

இல்ல மச்சான் வேலைக்கு போயி சம்பாதிச்சுதான் ஆகனுங்கிற நிலை என் வீட்ல இல்ல. எங்கப்பாவே உனக்கு பிடிச்ச ஏதாவது ஒருவேலை செய்யுப்பா உன் காசு எனக்கு வேணம்னுட்டாரு. எனக்கு ஏதாவது சேவை செய்யனும்னு ஆசை, அதை ஒரு வேலையா எடுத்துக்கிட்டேன்.இது மனசுக்கு பிடிச்ச வேலை மச்சான். ஆனா நீ என்னை விட்டுட்டு போறது தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு, ஆனா... மச்சான் சீக்கிரம் நானும் வந்துடுவேன். எனக்கும் சேர்த்து ஒரு ரூம் பாரு என்றான்.

ஆனால் அடிக்கடி சென்னை வருவான். வரும்போதெல்லாம் என் ரூம்ல தங்கிட்டு போவான். கடைசியா ஆறு மாசத்துக்கு முன்னால வந்திருந்தான். ரொம்ப சந்தோஷமா சொன்னான் - மச்சான்... ஒரு பெரிய ப்ராஜக்ட் ஒன்னுல இறங்கியிருக்கேன்.

என்னடா அது...

இது டூ யின் ஒன் ப்ராஜக்ட்.

டேய் புரியுற மாதிரி சொல்லுடா..

ஒன்னுமில்ல மச்சி, டோல்கேட் பக்கத்துல நிறைய அரவானிங்கள பார்த்துருப்பல்ல...

ஆமா.

அவங்க எல்லாம் வீட்ல இருந்து துரத்த பட்டவங்க. அதுல சில பேர் பிச்சையெடுத்து வாழ்றாங்க. சில பேர் உடல வித்து வாழ்றாங்க தெரியுமில்ல.

நல்லா தெரியும். அதுக்கென்ன இப்போ...?

இல்ல மச்சான், இப்படி எத்தன காலம் இவங்களால வாழமுடியும்? ஏதாவது நோய் வந்துடுச்சின்னாலோ இல்ல வயசாயிடுச்சின்னாலோ என்ன பண்ணுவாங்க. நிச்சயம் அவங்க குடும்பம் ஏத்துக்காது. இருக்க வரைக்கும் வாழ்ந்துட்டு எங்கயாவது போய் தற்கொலை செய்துக்க வேண்டியது தான்.
நான் அறிஞ்ச வரையில தற்கொலையில இவங்க சதவீதம் அதிகம்.

ம்... நீ சொல்றது சரிதான். இந்தியான்னு இல்ல எவ்வளவு முன்னேறின நாடானாலும், அவங்களுக்கான பிரச்சனைகள் இருந்துகிட்டேதான் இருக்கு.

அதே மாதிரி நாட்ல குழந்தை தொழிலாளர்கள், ஆதரவு இல்லாத பிச்சைக்கார குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாயிகிட்டே வருது.

ஆமாண்டா... எந்த கடைக்கு போனாலும், கிளீன் பண்றவங்க, எடுபிடிங்க எல்லாம் சின்ன சின்ன பசங்களா தான் இருக்காங்க. அரசாங்கம் இதையெல்லாம் இரும்புகரம் கொண்டு அடக்குனாதான் உண்டு. நாம என்னடா செய்ய முடியும் ? .

இல்ல மச்சான் ஏதாவது செய்யனும். அவன் செய்வான் இவன் செய்வான்னு நினைச்சிகிட்டு எல்லாரும் போய் கிட்டே இருந்தா... எவன் தான் செய்யறது..?

ம்... சரி என்ன அதுக்கு என்ன ப்ளான் வச்சிருக்க.

இவங்க ரெண்டு பேரையும் இணைக்கனும் அதுதான் நம்ம ப்ளான்.

கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லமாட்டியா..?

ஒன்னுமில்ல மச்சான். இந்த அரவானிங்க கிட்ட எல்லாம் பேசி அவங்க எதிர்காலத்துல சந்திக்கப்போற பிரச்சினைகள எடுத்து சொல்லி, அதில இருந்து தப்பிக்கிற வழிய சொல்லி கொடுத்தா பிரச்சினை தீர்ந்திடும்.

அது என்ன வழி...?

இப்போதைக்கு அவங்க எல்லாம் சம்பாதிச்சுகிட்டுதான் இருக்குறாங்க. ஆனா அவங்களுக்குன்னு யாரும் இல்லாததால அதை அப்பப்ப செலவு செஞ்சிடுறாங்க. அவங்கள எல்லாம் ஆளுக்கு ஒரு ஆதறவற்ற குழந்தைகள தத்து எடுத்துக்க சொல்லனும். அவங்களோட படிப்பு செலவு ஏத்துக்க சொல்லனும். அதுனால அவங்களுக்கு ஒரு உறவு கிடைக்கும். அதுக்காக சேமிக்கிற பழக்கம் வரும்.

ஆதறவு இல்லாத குழந்தைகளிடமும், இவங்க தான் உனக்கு உதவி செய்யுறாங்க, பின்னாடி படிச்சு பெரியவங்களாகி, அவங்களோட முதுமையில நீங்க உதவிய செய்யுங்கன்னு புரிய வைக்கனும். அப்படி செஞ்சா எதிர்காலத்துல இந்த ரெண்டு கேட்டகிரி மக்களும் தவறான வழியில போறது நின்னுரும்.

ம்... கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா படிச்சு முடிச்சிட்டா. பசங்களுக்கு இவங்கள கூட வச்சு பாத்துக்குற மனசு வருமா... இல்ல...நாகரீகம்கிற பேர்ல, இவங்கள அசிங்கமா நினைச்சு. ஒதுங்கி ஓட நினைப்பங்களா...?

எல்லாருக்கும் ஒதுங்கி ஓடற எண்ணம் வராது. ஆன சில பேர் நினைக்கலாம். அப்படி நடந்துச்சின்னா.. இந்த பசங்களுக்காக அந்த அரவானிங்க சேமிச்ச பணத்த, அவங்களே வயதான காலத்தில உபயேகிச்சி நல்ல படியா வாழலாமே.

ம்... நல்லாதான் யோசிக்கிற. ஆனா நடைமுறைக்கு ஒத்து வருமா..?

நான் திருச்சியில நிறைய அரவானிங்க கிட்ட பேசிட்டேன். அவங்களுக்கு பிடிச்சிருக்கு. நாளைக்கு நானும் சில அரவானிங்களும் சேர்ந்து மும்பை தாராவி, சிவப்பு விளக்கு பகுதி, போன்ற இடத்துக்கு போய் சில பேரை பார்த்து பேச போறோம். அதுக்காக தான் சென்னைக்கு வந்துருக்கேன்.
  
மாணிக்கத்தை நினைக்க பெருமையாக இருந்தது. ரொம்ப இளகின மனசுக்காரன். அடுத்தவங்க கஷ்டத்தை தாங்க முடியாதவன். அடுத்த நாள் கிளம்பி போனவன அதுக்கப்புறம் ஆறு மாசம் கழிச்சு இப்பதான் பார்க்கிறேன்.

அரை மணி நேரத்திற்க்கு பிறகு வண்டி வீட்டை அடைந்தது. மாணிக்கத்தை எழுப்பினேன். ஓரளவு போதை குறைந்திருந்தது. தடுமாறியபடியே என் பின்னால் நடந்து வந்தான். அப்பாவும் அம்மாவும் வீட்டில் இல்லை. வாடா என்றான் தம்பி. அப்பா வர்றதுக்குள்ள இவனை மாடி ரூம்ல படுக்க வைச்சு லைட்ட ஆப் பண்ணுடா என்றேன். என்ன அய்யா ஃபுல்லா? என்றபடியே அழைத்து சென்றான்.

மறுநாள் காலையில்...

என்னடா பிரச்சினை வீட்ல...?, ஏன் ஆறு மாசமா என்ன வந்து பாக்கல...? மும்பை போனியே என்னாச்சு..? கேள்விகளை மாணிக்கத்திடம் அடுக்கினேன்.

இல்லடா..., நான் திருச்சியில இருந்து சில அரவானிங்கள அழைச்சிட்டு மும்பை போனேன். முதல்ல கொஞ்சம் பேருக்கு ப்ளான் பிடிக்கல... அடிக்க வந்தாங்க... ஆனா இதையெல்லாம் எதிர்பார்த்துதான் நான் அரவானிங்கள அழைச்சிட்டு போயிருந்தேன். அவங்கயெல்லாம் பேசி ஒருவழியா சமாதானம் ஆனாங்க. ஆனா இதெல்லாம் நடக்க கிட்டத்தட்ட ரெண்டுமாசமாச்சு, சிவப்பு விளக்கு அரவானிங்க கிட்ட பேசவே ஒருமாசம் ஆயிடுச்சு. அதுக்கிடையில மாமா பசங்க கிட்ட அடி உதையெல்லாம் வாங்கியாச்சு. கடைசியா ரெண்டு மாசம் கழிச்சு திருச்சி வந்து இறங்கி நேரா வீட்டுக்கு போனா, அப்பா உள்ள வராதனுட்டார். இந்த வீட்லயும் பொம்பள பிள்ளைங்க இருக்கு அதுக்கு கல்யாணம் பண்ண வேண்டியிருக்கு தயவு செஞ்சு வெளியில போன்னுட்டார்.

ஏன்...?

அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது. நான் வர ரெண்டு மாசம் ஆனதால, என்ன பிடிக்காத கொஞ்சம் பேர்  நான் அரவானிங்கள அழைச்சிட்டு போய் மும்பையில வித்துட்டதா போலிஸ்- ல புகார் கொடுத்திட்டாங்க. அதுவும் இல்லாம இன்னும் சில அரவானிங்க எங்க வீட்லயே போய் எங்கப்பாட்ட ரொம்ப பிரச்சினை பண்ணவும் அவரு ரொம்ப அவமானப்பட்டு நான் இனிமே அவரு பிள்ளையே இல்லன்னுட்டாரு. நான் வேலை பார்த்த சேவை மையம் என்னை தூக்கி வெளிய வீசிடுச்சு.  இருந்த பணத்தை வச்சு போலிஸ் கேஸை மூடிச்சு, இப்பத்தான் ஒருவழியா எல்லா பிரச்சனைய விட்டும் வெளிய வந்திருக்கேன். என்ன ஒன்னு நான் இவ்வளவு தூரம் யாருக்காக போராடினனோ அவங்களே என்ன பத்தி தப்பா பேசுனதுதான் என்னால தாங்கிக்க முடியல.

சே... என்ன மனிதர்கள். உண்மையிலேயே எல்லாரும் நல்லாயிருக்கனும்னு நினைக்கிறவனை, இவ்வளவு கேவலப்படுத்திருக்கானுங்களே. ஒருவேளை நல்லது நினைக்கிறவன் குறைந்து போனதுக்கு நாமதான் காரணமோ...?

சரி, அதுக்காக படுக்ககூட இடம் இல்லாம இப்படி ப்ளாட்பார்ம்-ல படுத்துக்கிடக்கறதுக்கு, பேசாம சென்னை வந்துரு. நீ படிச்ச படிப்புக்கு ஏத்தமாதிரி ஒரு வேலை வாங்கிறலாம்.

இல்ல மச்சான் நேத்துதான் ஒருத்தர்ட்ட பேசியிருக்கிறேன். எய்ட்ஸ் செல் - ல விழிப்புணர்வு ப்ரேக்ராம் பண்ண ஆள் இல்லையாம். நாளையிலிருந்து போக போறேன். ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு ஊர், தங்குறது, திங்கிறதுக்கு எல்லாம் பிரச்சினையே இல்ல. மனசுக்கு பிடிச்ச வேலை மச்சான்.




அன்புடன்
முத்துக் குமரன்.

 நன்றி : பட உதவி - கூகுள்

10 கருத்துகள்:

  1. சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா... அருமையா எழுதி இருக்கீங்க... உண்மைக் கதையா தெரியவில்லை.. ஆனால் மனதைத் தொட்டு விட்டது... தொடர்ந்து எழுதுங்க. நானும் பதிவன்தான்... இங்கு என்னுடைய சிறுகதை லிங்க் ஒன்னும் தாரேன்.. வந்து பாத்து கருத்து சொல்லுங்க. என் பதிவகளை வாசித்து விட்டு பிடிச்சிருந்தா பின் தொடருங்க... உங்களை நண்பனா அடைந்தாள் சந்தோஷப் படுவேன்.. என் சிறுகதை..

    என் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு நன்றி திரு அருண்பிரசாத்.

      //உண்மைக் கதையா தெரியவில்லை...//

      இது உண்மை சம்பவம்தான் ஆனால் பெயர் மாற்றங்கள் மற்றும் சிறு கற்பனை கலப்புகளுடன்...

      //இங்கு என்னுடைய சிறுகதை லிங்க் ஒன்னும் தாரேன்.. வந்து பாத்து கருத்து சொல்லுங்க//
      நிச்சயமாக படித்து கருத்து சொல்கிறேன்.

      //உங்களை நண்பனா அடைந்தாள் சந்தோஷப் படுவேன்//

      நண்பரே, நான் பதிவு எழுத வந்ததே, எனது நட்பு வட்டத்தை விரிவுபடுத்த தான். மற்றபடி எனக்கும் எழுத்துக்கும் காத தூரம். இருந்தாலும் ஏதாவது எழுத வேண்டுமே என்பதற்காக நான் கடந்து சென்றவைகளை பதிவிடுகிறேன். நிச்சயம் நீங்களும் என் நண்பர்தான். நன்றி.

      நீக்கு
  2. நல்லதொரு ஆலோசனையையும் எடுத்துச் சொல்லக் கூடிய பதிவு...
    கதையெழுதுவதில் மிக அனுபவம் உள்ளவர் போல..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிட்டுக்குருவி அவர்களே. எனது வலை பக்கம் ஆரம்பிக்கும் வரை கதை என்று எதையும் எழுதியதில்லை. எதையும் எழுத தெரியாமல் வலைப்பக்கத்தை ஆரம்பித்து மூன்று ஆண்டு காலம் சும்மா இருந்துவிட்டு, சரி முயற்சித்து பார்ப்போம் என்று கடந்த இரு மாதங்களாக எதையோ எழுதி வருகிறேன். உங்களை போன்ற நண்பர்கள் கொடுக்கும் ஊக்கத்தால் மேலும் மேலும் எழுத ஆசைப்படுகிறேன்.

      நீக்கு
  3. நல்லா எழுதியிருக்கீங்க சார். பாராட்டுக்கள். ஆங்காங்கே சிலர் இதுபோல பொதுநல சேவை செய்ய விருப்பத்துடன் உள்ளனர். அவ்ர்களை அடையாளம் கண்டு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் அமைப்புகள் இருந்தால் சமுதாயத்திற்கு நல்லது தான்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்