ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

இரத்த வங்கிகள் செய்வது சேவையா? வியாபாரமா?

 கடந்த சில நாட்களாக இரத்த தானம் மற்றும் இரத்த வங்கிகளின் செயல்பாடுகள் பற்றி சில மனக்குமுறல்களை சமூக வலைத்தளங்களில் கடந்து செல்ல நேரிட்டது. சில கருத்துக்களுக்கு நான் பதிலளித்திருந்தாலும் சற்று விரிவாக என் எண்ணத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

பொதுவாகவே காப்பகங்கள் ஆனாலும் சேவை மையங்கள் ஆனாலும் நன்கொடை என்று மக்களை அணுகும் போது, இவர்கள் எல்லாம் தன்னை ஏமாற்றி சொகுசாக வாழ நினைக்கிறார்கள் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களுக்கு தோன்ற ஆரம்பித்துவிடும். நாட்டின் சூழ்நிலை இவ்வாறு இருக்க கொடையாக கொடுத்த இரத்தத்தை அவர்களே பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால்.... அவ்வளவுதான், டாய்லட் பேப்பர் கிடைத்தாலும் இரத்த வங்கிகளில் முறைகேடு, இரத்தம் விற்பனை என்று எழுதி குவித்துவிடுகிறார்கள். அவர்களை சொல்லி குற்றம் இல்லை, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுப்பான பதிலை எந்த இரத்த வங்கிகளும் பொறுமையாக விளக்க முற்படுவதில்லை அல்லது அதற்கான நேரம் இல்லை.

சில நாட்களுக்கு முன்பு கூகுள் ப்ளஸ்-ல் ஒரு நண்பர் கேட்டது “ பல இடங்களிலும் இரத்த தான முகாம்கள் நடந்து கொண்டிருக்கும் போது மீண்டும் மீண்டும் இரத்தம் தேவை என விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. அப்படியானால் இதுவரை சேகரித்த இரத்தம் என்ன ஆனது?” - இந்த கேள்வியில் எந்த தவறும் இல்லை, ஆனால் சேகரிக்கும் இரத்தம் என்ன ஆகிறது ? ஏன் தானமாக பெறப்படும் இரத்தம் விலைக்கு விற்கப்படுகிறது? ஏன் உறவினர்கள் இரத்தம் கொடுக்க வலியுறுத்த படுகிறார்கள்? இது போன்ற அடிப்படை கேள்விகளுக்கான பதிலை கூட கொடுக்காமல் இரத்த தானத்தை மட்டுமே வலியுறுத்தி மக்கள் விழிப்புணர்வு பெற இரத்த வங்கிகள் விரும்புகின்றன. அதனால்தான் மக்கள் இரத்த வங்கிகள் முறைகேடாக வியாபாரம் செய்வதாக அச்சப்படுகிறார்கள். அதனால் எனக்கு தெரிந்த சில தகவல்களை சொல்லவே இந்த பதிவு.


இரத்தத்திற்க்கு மாற்றாக செயற்கை இரத்தம் பற்றி சில ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் கூட நூறு சதவீதம் சரியான மாற்று இதுவரை கண்டறியப்படவில்லை. அதன் காரணமாக ஒருவரின் இரத்த தேவைகளுக்கு மற்றொருவரின் இரத்தத்தையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. WHO என்றழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி, தெற்காசிய நாடுகளின் ஒருவருட இரத்தத்தின் தேவை ஒரு கோடியே 60 லட்சம் அலகுகளாக(unit) உள்ளது. ஆனால் தானமாக பெறப்படும் இரத்தத்தின் அளவு வெறும் 94 லட்சம் அலகுகளாக உள்ளது. 66 லட்சம் அலகுகள் பற்றாக்குறையாகவே உள்ளது. இந்தியாவில் மட்டும் 20 லட்சம் அலகு பற்றாக்குறையாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க அரசு   தனியார் இரத்த வங்கிகளுக்கும் அனுமதி அளித்தது. இந்தியாவின் இரத்த வங்கிகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம். 1. அரசு மருத்துவமனை இரத்த வங்கிகள். 2. செஞ்சிலுவை சங்க இரத்த வங்கிகள்( IRCS ), 3. அரசு சாரா நிறுவன இரத்த வங்கிகள்( NGO sector). 4. வணிகரீதியிலான இரத்த வங்கிகள் (commercial sectors). இதில் வணிகரீதியிலான இரத்தவங்கிகளுக்கான அனுமதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Blood Camps
இந்த வங்கிகள் இரத்த தான முகாம் நடத்தியோ(Blood donation camp) அல்லது, கொடுக்கப்படும் இரத்ததிற்க்கு மாற்றாக நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து இரத்தமாகவோ(Replacement), அல்லது, தானாக முன்வந்து தானம் செய்பவர்களிடமிருந்தோ( Volunteers ) இரத்தத்தை பெறுகின்றன. இந்தியாவில் பணத்துக்காக இரத்தம் கொடுப்பது Drug and Cosmetic Law வின் படி சட்டவிரோதம். இவ்வாறு பெறப்படும் இரத்தம் நேரிடையாக ஆய்வு செய்யாமல் நோயாளிகளுக்கு ஏற்றப்படுவதில்லை (தவிர்க்க முடியாத தருணங்களும் உண்டு). இந்த இரத்தத்தில் அரசு வகுத்துள்ள 10 வகையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் இதற்கான செலவுகள் அனைத்தும் அந்த இரத்த வங்கிகள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆய்வுகளில் ஏதேனும் ஒரு ஆய்வின் முடிவு சரியில்லை என்றாலும், அந்த இரத்தம் சரியான முறையில் அழிக்கப்பட வேண்டும். இப்படி நூற்றுக்கு பத்து அலகு இரத்தம் எந்த பயனும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த பத்து அலகு இரத்தத்திற்க்கு பயன்படுத்தப்பட்ட பைகள் மற்றும் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கான செலவுகள் அனைத்திற்க்கும் எந்த நோயாளியோ அல்லது அரசாங்கமோ நிதி உதவி அளிக்கப்போவதில்லை. அதுமட்டும் அல்லாமல் சேமிக்கப்படும் இரத்தத்தின் ஒரு பகுதி தேவை ஏற்படும் முன்பே காலாவதியும் ஆகிவிடுகிறது. அதனால்தான் அரசாங்கம் ஒரு அலகு இரத்ததிற்க்கு அதிகபட்சமாக 850 ரூபாய் வரை கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதியளித்துள்ளது. இந்த செலவு என்பது ஆய்வுக்கான கட்டணம், இரத்தம் சேமிக்கும் பை-க்கான கட்டணம், சேமிக்கும் இயந்திரம், மற்றும் இதற்க்காக உழைக்கும் ஊழியர்களின் சம்பளம், இன்னும் பிற கட்டணங்களை உள்ளடக்கியது. நிச்சயம் தானமாக பெற்ற இரத்தத்திற்கான கட்டணம் அல்ல.

Blood Components

இந்தியாவில் இரத்த வங்கிகளுக்கு இரண்டு வகையான லைசன்ஸ் அனுமதி உண்டு. 1. Whole blood Licence. 2. Component Licence.

whole blood என்பது ஒருவரிடம் எடுக்கப்படும் இரத்தம் ஆய்வுகளுக்கு பிறகு இரத்த பகுதிகளாக பிரிக்கப் படாமல் முழுமையாக நோயாளிக்கு ஏற்றப்படுவது.

Component என்பது எடுக்கப்படும் இரத்தம், சிவப்பணுக்கள், ப்ளாஸ்மா, இரத்த தட்டுக்கள் என பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு எந்த பகுதி யாருக்கு தேவையோ அதை மட்டும் அவருக்கு ஏற்றுவது. இந்த முறையில் இரத்தம் பிரிக்கப்பட்டு விடுவதால், கட்டணமும் பிரிக்கப்பட்டுவிடும்.

ஆக whole blood வாங்கும் போது சற்று அதிக விலை கொடுப்பதும், இரத்த பகுதிகளாக வாங்கும் போது சற்று விலை குறைவாக கிடைப்பதும் இயல்பு. ஆனால் மக்கள் இந்த விபரம் புரியாமல் அந்த வங்கியில் விலை குறைவாக இருப்பதாகவும் இங்கு அதிகமாக இருப்பதாக விரக்தி கொள்வதும் உண்டு. அதனால் இரத்த வங்கிகள் வியாபாரம் செய்வதாக சண்டையிடுவதும் உண்டு.

சேவை என்றால் இலவசம் என்ற கருத்து பெரும்பாலானவர்களிடம் இருப்பதுதான் இது போன்ற சச்சரவுகளுக்கு காரணம். இலவசமாக உதவிகள் செய்ய அரசாங்கத்தால் மட்டுமே முடியும் அதற்காகதான் அரசு வரிகள் போடுகிறது. ஆனா அரசால் மட்டுமே பூர்த்தி செய்துவிட முடியாத இது போன்ற சேவைகள் தனியாரிடம் தரப்படுகின்றன. எந்த விதமான எதிர்பார்ப்புக்களோ, அல்லது லாபங்களோ இல்லாமல் ஒரு நிறுவனத்தை நடத்த முதலாளிகள் எல்லாம் அன்னை தெரசாவோ, நைட்டிங்கேல் அம்மையாரோ அல்ல.

சென்னையில் ஒரு மருத்துவர் வாடகைக்கு வீடு தேடினால், இலவசமாகவோ அல்லது சலுகை விலையிலோ எந்த தரகரும் வீடு தேடி தரப்போவதில்லை ஆனால் நாம் அவர்கள் சலுகை தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மின்வெட்டு நேரத்தில் சிறு சிறு பெட்டிக்கடைகளில் கூட மெழுகு வர்த்தியின் விலை தேவைக்கேற்ப இருமடங்காகி போவதை சகித்துக் கொள்ளும் நாம், அரிய வகை இரத்தம் ஆனாலும் நிர்ணயத்துள்ள விலைக்கு மட்டுமே கொடுக்கும் இவர்கள் செய்வதை சேவை என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.(எந்த இரத்த வங்கியும் இரத்த வகைக்கேற்ப விலை நிர்ணயம் செய்யக்கூடாது, அப்படி நடந்தால் Central Drugs Standard Control Organization க்கு ஒரு புகார் தட்டிவிடுங்கள்).

எல்லா இரத்த வங்கிகளும் புனிதமானவை என்பது என் வாதமல்ல. ஆனால் பெரும்பாலான இரத்த வங்கிகள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடப்பது நான் அறிந்தது. இது சேவையா? வியாபாரமா? என்று தீர்மானிப்பது அல்ல என் நோக்கம். என் கருத்தை பகிர்ந்திருக்கிறேன். படித்து விட்டு நீங்களே உங்கள் முடிவை பின்னூட்டமிட்டு செல்லுங்கள்.



அன்புடன்
முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்

8 கருத்துகள்:

  1. இரத்த வங்க்கிகளின் நிலையையும்
    இதுவரை அறியாத பல தகவல்களையும்
    அறிய முடிந்தது
    கறுப்பு ஆடுகள் எந்த மந்தையிலும் உண்டு
    விதிவிலக்குகளை விலக்கி விடுதலே நன்று
    விரிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நாம். தானம். செய்கின்ற இரத்தத்தை பெறுகின்ற ஒ௹வர்..நம் கண்மூன்னே உயிர் பெறுகின்ற அதிசயமிக்கச்செயஎனலாம் நாம் காணும் பேரதுவேறு எந்தத் தானத்திற்கும். ஈடாகாது என்பது நிதர்சனமான உண்மை ...

    பதிலளிநீக்கு
  3. 1616_ம் ஆண்டு லில்லிம் ஹார்வி என்பவர். நமது உடலில் இரத்த ஓட்டம் உள்ளனது கண்டறிந்தார். 1665_ம் ஆண்டு. ஒரு நாயின் இரத்தத்தை மற்றொரு நாய்க்கு கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டடு. 1667_ம் ஆண்டு பிரொஞ்௬ நாட்டின் டோனிஸ் என்பவரால் 15 வயது சிறுவனுக்கு மிருகத்தின் இரத்தம் செலுத்தப்பட்டதாக முதல் பதிவு செய்யப்பட்டது

    பதிலளிநீக்கு
  4. 1914_ம் ஆண்டு தானம். செய்த மனித இரத்தம். உறையாமல் இருக்க பக்க வினளவுகள் இல்ரலாத ஒரு திரவம் கண்டு பிடிக்கப்பட்டது...1936_ம் ஆண்டு தானம். செய்த மனித இரத்தம் உறையாமல் இருக்க பக்க வினளவுகள் இல்லாத ஒரு திரவம் கண்டு பிடிக்கப்பட்டது
    1936_ம் ஆண்டு தானம் செய்த இரத்தம் கெடாமல் பல நாட்கள் பாதுகாக்கும் முறையை ரஷிய டாக்டர் ஆண் ட்ர்பாட்சரவ் கண்டு பிடித்தார் 1937_ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க குடியரசு உலகத்தின் முதல் இரத்த வங்கி.முறைதனய துவக்கியது 1936__45ஆண்டுகளில் இரண்டாவது உலக யுத்தம் நடத்த காலக் கட்டத்தில் இந்தியாவில் கல்கத்தாவில் முதல் இரத்த வங்கி ஆரம்பிக்கப்பட்டது

    பதிலளிநீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்